advertisement

தாம்பரத்தில் ஓசி பிரியாணி கேட்டு அலப்பறை...  இளைஞர்கள் இருவர் கைது

ஜூன் 30, 2025 9:18 முற்பகல் |

 

தாம்பரத்தில் ஓசியில் பிரியாணி வாங்கி விட்டு கடை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் மஸ்தான் (51). இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக தள்ளு வண்டி கடையில் பிரியாணி விற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 29) வழக்கம் போல கடையை நடத்திக் கொண்டிருந்த மஸ்தான் மதிய உணவுக்கு வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது கடையில் பணி புரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த சபியன் என்ற நபர் கவனித்து வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த இருவர் நான்கு பார்சல் பிரியாணி கேட்டுள்ளனர். அதன் பின்னர் பிரியாணி பார்சலை கட்டி கொடுத்து விட்டு அதற்கு சபியன் பணம் கேட்டுள்ளார்.

பிரியாணியை வாங்கிக் கொண்ட இளைஞர்களில் ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி, ''உனக்கு பணம் வேண்டுமா? அல்லது கத்தி வேண்டுமா?'' என மிரட்டினாராம். இதனால் பயந்து போன சபியன், ''என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்'' என கெஞ்சியுள்ளார். இதையடுத்து கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ''காவல் நிலையத்தில் புகார் அளித்தால் வெட்டி கொன்று விடுவேன்'' என மிரட்டிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றுள்ளனர்.
 
பின்னர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு கடைக்கு வந்த மஸ்தானிடம் நடந்தவற்றை சபியன் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து மஸ்தான் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியைச் சேர்ந்த மதன் (28), சச்சின் (25) என தெரிய வந்தது.

இதையடுத்து தாம்பரம் போலீசார் கடப்பேரியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் கத்தியை காட்டி ஓசியில் பிரியாணி வாங்கியதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement