துணை வேந்தர்கள் நியமனம் மைக்கை மியூட் செய்த நீதிபதிகள் - வழக்கறிஞர் வில்சன் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கு திமுக வழக்கறிஞர் வில்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வந்ததால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தது..அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வேந்தராக தமிழ்நாடு முதல்வர் செயல்படுவதற்கும், பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நெல்லையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் வெங்கடாசலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள்
இந்நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால அமர்வில் இந்த வழக்கு நேற்று (மே 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேஷாத்ரி நாயுடு ஆஜராகினார். யுஜிசி சார்பில் கூடுதல் சொலிசிஸ்ட ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜரானார். பல்கலைக்கழகங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் சட்டங்கள் யுஜிசி விதிகளுக்கு முரணானவை என்றும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு உயர்கல்வி துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் தமது வாதத்தின் போது, “துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை அவசர, அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞரான மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அரசின் சட்டங்களுக்கு தடை கோரும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க போதிய அவகாசம் தராமல் விடுமுறை கால அமர்வில் அவசரகதியில் விசாரிப்பது நியாயம் அல்ல.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக மனுதாரரின் வழக்கை தள்ளிவைப்பதால் வானம் இடிந்துவிடாது. யுஜிசி விதிகளைவிட தமிழக அரசின் சட்டங்கள் மேலானது. இந்த இடைக்கால தடை கோரும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய தமிழக அரசின் மனு செல்லாததாகி விடும்.
இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை விதிக்க கூடாது. வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் வில்சன், “ கால அவகாசம் தர வேண்டும் என கூறினேன். ஒரு கட்டத்தில் நீதிபதிகள் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்பதை கூட என்னால் கேட்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களது மைக்கை மியூட் செய்து விட்டார்கள். மைக் ஆன் செய்த பிறகு நீதிபதிகளிடம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்கள் ஆர்டரை அப்லோடு செய்த பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்” என்று கூறினார்.
கருத்துக்கள்