வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏமாற்றியது. இந்த நிகழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட சூழலில், தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து 990 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. வானிலை ஆய்வு மையம் புயல் உருவான பிறகே அந்த பெயரை அறிவிக்கும். ‘மோன்தா' என்ற பெயர் தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும். இந்த பெயருக்கு ‘அழகான மலர்' அல்லது ‘மணம் வீசும் மலர்' என்று அர்த்தம்.
வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணம் - விசாகப்பட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் நாளை மறுநாள் மற்றும் 28-ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துக்கள்