அரசுகள் கூறியும் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சமையல் கியாஸ் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதிய பொதுமக்கள் தாங்கள் 'புக்' செய்த சிலிண்டர்கள் தங்கள் வீடு தேடி வரும் வரை காத்திருக்காமல் நேரடியாக கியாஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாங்கிச் செல்லும் நிலையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் 3-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகின்றனர். சென்னையில் தியாகராயநகர், அண்ணாநகர், மாம்பலம், ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினர்.
பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பி கொண்டனர். இதுதவிர குடிநீர் கேன், பாட்டில்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர்.
முன்னதாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. எனவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை. வீண் பதற்றம் வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. இதேபோன்று எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், தமிழகத்தில் எங்கும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.





கருத்துக்கள்