விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பயணிகள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணங்கள் அதிரடியாக மும்மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தற்பொழுது சென்னை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் பேருந்து, ரயில் மற்றும் கார்கள் மூலம் பயணித்தாலும், ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் இடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனைப் பயன்படுத்திக் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வேறு வழியின்றிப் பல குடும்பங்கள் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதன் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை (மே 31) அன்று தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் வழக்கத்தை விடப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான விமானங்களில் அனைத்து இருக்கைகளும் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில், ஓரிரு விமானங்களில் எஞ்சியிருந்த ஒருசில பயணச்சீட்டுகளின் கட்டணங்கள் மும்மடங்கு வரை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருந்தன.
கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்ட போதிலும் சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததுடன், அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பியே காணப்பட்டன.





கருத்துக்கள்