பரமக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி , பரமக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது , பரமக்குடி நகராட்சியில் ரூ.20.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வரும் புல் பண்ணை வளாகத்தில் நில அளவீடு, எல்லை நிர்ணயம் , வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நிர்வாகக் கட்டிடம் , குளோரின் தொட்டிக்கான கட்டமைப்பு வடிவமைப்பு சென்னை ஐஐடி மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளோரின் அறை, நிர்வாகக் கட்டிடம், பக்கவாட்டு சுவர் , கான்கிரீட் பணிகள் நிறைவடைந்த நிலையில், பக்கவாட்டு சுவர்களுக்கான சென்ட்ரிங் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து , பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி கிராமத்தில் ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அப்பள்ளியில் பயிலும் மாணவர், மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கல்வி, கற்றல் வசதிகள் , பள்ளி சூழல் குறித்து கேட்டறிந்து, சிறப்பாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
டர்ந்து , அரியனேந்தல் கிராமத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து நிறைவு செய்து, தேவையான அனைத்து வசதிகளுடன் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வருமாறு அலுவலர்களை அறிவுறுத்தியதுடன், மேலும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் தரமான முறையில், நிறைவு பெற வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு முழுமையான பயன் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் என தெரிவித்தார்.
ஆய்வில், பரமக்குடி நகராட்சி ஆணையர் தாமரை , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்