செந்தில் பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியின் வீடு உட்பட தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, மூர்த்திபாளையத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியின் வீடு, நெரூர் அருகே உள்ள கோயம்பள்ளியில் உள்ள திமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரனின் வீடு, செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கரூர் சக்தி மெஸ் கார்த்தியின் வீடு, தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று, சென்னையில் தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நிறைவடைந்த பின்னரே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்டவை குறித்த முழுமையான தகவல்கள் தெரிய வரும். தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் இந்தச் சோதனை அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





கருத்துக்கள்