தூத்துக்குடி : குழந்தைகள் பாதுகாப்பு,கல்வி குறித்து ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், குடும்ப வன்முறை தொடர்பான நிலுவை வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தை திருமணங்களைத் தடுத்தல் மற்றும் பள்ளிக் குழந்தைகள் இடைநிற்பதைத் தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், "பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து கண்காணிப்பதோடு, அவர்களின் பெற்றோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அக்குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகளைத் துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சுதா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் அனுசியா மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்