திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கூடுதல் ரெயில், பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் திருவிழா வருகின்ற 09.06.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: விசாக தினத்தன்று திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கைகளை திருச்செந்தூர் நகராட்சி மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் சேரும் குப்பைக் கூளங்களை அவ்வப்போது அகற்றிட நகராட்சி மூலமாக உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், நீரேற்று நிலையம், ஆத்தூர் திருச்செந்தூர் தெப்பக்குளம் நீளேர் நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் மூன்று இடங்களில் தங்குதடையின்றி மின் விநியோகம் செய்யத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக்ககழகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு தரைவழித் தொலைபேசி மற்றும் அலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகளை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் செய்திட வேண்டும்.
தீயணைப்புத்துறையினர் கடலில், உயிர்க்காப்பு மிதவை வளையங்களுடனும், உயிர்மீட்பு படகுடனும் (லைப்போட்) பாதுகாப்பு பணிபுரியவும் மற்றும் மீன்வளத் துறையினரை நீச்சல்வீரர்கள் கடலாள், முத்துகுளி பணியாளர்களுடன் பாதுகாப்புப் பணிபுரிய வேண்டும். தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு ஊர்தியில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், அவசர மருத்துவ ஊர்தியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், வைகாசி விசாகம் முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மற்றும் ஆவுடையார்குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட கீழ்தாமிரபரணி வடிநிலக் கோட்ட நீர்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக போற்றப்படுவதும், தமிழகத்தின் தலைசிறந்த திருக்கோயில்களில் முக்கியமானதாக கருதப்படுவதமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு , திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை ஆணையர் ஞானசேகரன் , திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், காவல்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்