திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் திறந்து வைத்தார்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.10.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.10 கோடியே 57 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 சொகுசு அறை (Suit Room), 24 குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள், 24 சாதாரண அறைகள் என மொத்தம் 52 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துகொண்டு "பக்தர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடியே 57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியினை திறந்து வைத்து, பக்தர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு துத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
கருத்துக்கள்