சிறுமியை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடுபுகுந்து 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள வீடுபுகுந்து, 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வெற்றிசெல்வன் (29) என்பவரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாலாட்டின்புதூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா,வெற்றிசெல்வன் குற்றவாளி என உறுதி செய்து அத்துமீறி வீடுபுகுந்த குற்றத்திற்காக 7 வருடங்கள் சிறை தண்டனை, ரூபாய் 2500 அபராதமும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 10,000/- அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 2500 அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் சுகாதேவி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சுதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.





கருத்துக்கள்