தூத்துக்குடி : குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி (எ) ஆனந்த் (எ) ஆனந்தகுமார் (37) என்பவர், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவரது தொடர்ச்சியான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, இவரைத் தமிழகத் தடுப்புக் காவல் சட்டத்தின் (1982) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆறுமுகசாமியைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் இன்று ஆறுமுகசாமியைக் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.





கருத்துக்கள்