advertisement

தூத்துக்குடி: கார் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

ஜூன் 09, 2026 4:21 முற்பகல் |

 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த  சிவா (வயது 56). இவரது காரில் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி லதா(43), சிவன்ஆண்டி மனைவி கலா(54), தேவா மனைவி ராஜேஸ்வரி(33) மற்றும் சுபேதன்(22) ஆகியோருடன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ் மனைவி விஜயா(48) என்பவரும் இணைந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவிற்காக வந்துள்ளனர்.

நேற்று கோவிலில் சாமி தரிசனத்தை முடித்தவர்கள், அதே காரில் மீண்டும் நாகப்பட்டினத்திற்குப் புறப்பட்டுள்ளனர். காரை சிவா ஓட்டியுள்ளார். திருச்செந்தூரில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் புறப்பட்ட இவர்களது கார், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையாபுரம் அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிரே தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் கார் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த சிவா உட்பட 6 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர். விபத்து நடந்தவுடன் கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்களும், போலீசாரும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்திருந்த லதா என்பவர் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement