மகாராஷ்டிரா : இளம்பெண்ணின் கணவரை குத்திக்கொன்றவர் கைது
மராட்டிய மாநிலம் நவி மும்பை மாவட்டம் வைஷி பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் மண்டல் (வயது 35). இவருக்கு திருமணமாகி பாத்திமா (வயது 25) என்ற மனைவி உள்ளார்.
இதனிடையே, பாத்திமாவை அதே பகுதியை சேர்ந்த அமீனுர் அலி (வயது 21) என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். அபுபக்கரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாத்திமாவிடம் அமீனுர் அலி வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாத்திமாவை திருமணம் செய்ய எண்ணிய அமீனுர் அலி அதற்கு இடையூறாக உள்ள அவரின் கணவர் அபுபக்கரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த 21ம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அபுபக்கரை இடைமறித்த அமீனுர் அலி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அபுபக்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடலை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வீசிய அமீனுர் அலி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாதது குறித்து கவலையடைந்த பாத்திமா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட அபுபக்கரின் உடலை மீட்டனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஒருதலைக்காதலால் அபுபக்கரை கொலை செய்த அமீனுர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துக்கள்