அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு
தனது குடும்ப சூழலை கருத்தில்கொண்டு தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் ஞானசேகரன் தரப்பு கோரிக்கை விடுத்தது.
கடந்த வருடம் டிசம்பர் 23-ம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நேரத்தில் அமர்ந்திருந்த ஒரு மாணவியை, மர்மநபர் ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்தான் சம்பவம் நடந்த தினத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட மாணவியும் வீடியோ கால் மூலமாக ஞானசேகரனை அடையாளம் காட்டினார். இதையடுத்து, ஞானசேகரனை போலீசார் டிசம்பர் 26-ல் கைது செய்தனர். இதில், அவர் தப்பிக்க முயன்றதால் கீழே விழுந்து கை, கால்கள் முறிந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
பின்னர், ஞானசேகரனிடம் விசாரணை நடத்த 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இதில், இரவு - பகலாக அவரிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை விசாரணைக் குழு பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையையும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தினசரி அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் 29 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, அதுதொடர்பான வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல, சிசிடிவி ஆதாரங்களும், செல்போன் குரல் பதிவுகளும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வழங்கப்பட்டன.
இதனிடையே, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மே 28-ம் தேதி வெளியாகும் என நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி, இன்று இவ்வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, போலீசாரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மறு ஆய்வு செய்த நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயத்தில், தனது குடும்ப சூழலை கருத்தில்கொண்டு, குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு குற்றவாளி ஞானசேகரன் தரப்பில் கோரப்பட்டது.
கருத்துக்கள்