உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : முதல்வர் துவக்கி வைத்தார்
ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் "உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, வேளாண்மைக்கென ஐந்து தனிநிலை அறிக்கைகளை அளித்து, அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட 1,94,076 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக எவ்வித திட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதில் நவீன தொழில்நுட்பங்களின் பங்கு இன்றியமையாததாகும். இத்தொழில் நுட்பங்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்த உழவரைத்தேடி வேளாண்மை – உழவர்நலத்துறை திட்டம் வழிவகுக்கிறது என தெரிவித்தார்.
முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் போன்ற துறைகளின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட கருத்துக் கண்காட்சியினை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மோன்தாஸ் சௌமியன், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்