நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் பேட்டி
இவர்களை கைது செய்ததால் போதைப் பொருள் ஒழிந்துவிடுமா?” நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்பான போதைப்பொருள் வழக்கு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது. பிரசாத் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, மூன்று கொக்கைன் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த வழக்கை அரசியல் உள்நோக்கத்துடன் இணைத்து, “பிரசாத் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? சந்தன மரம் கடத்திய வீரப்பனை கொன்றீர்கள், ஆனால் அதை வாங்கியவர்களை என்ன செய்தீர்கள்? குஜராத்தில் அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தொடர்ந்து பேசிய சீமான் “நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள். இவர்கள் மட்டுமா போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்? இந்தியா முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் பரவியுள்ளது. பயன்படுத்தியவர்களை மட்டும் கைது செய்வது என்ன மாதிரியான நீதி?” என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சினிமா வட்டாரத்தில் நடக்கும் கொக்கைன் விருந்துகள் குறித்து பாடகி சுசித்ரா முன்பு பேசியதை சுட்டிக்காட்டி, இந்தப் பிரச்சினை ஒரு சிலரை மட்டும் குறிவைத்து தீர்க்கப்படுவதாக விமர்சித்தார்.
கருத்துக்கள்