சென்னை- ராமேஸ்வரம் வந்தேபாரத் ரயிலை உடனடியாக இயக்க வலியுறுத்தல்
சென்னை- ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலை உடனடியாக இயக்க வேண்டுமென மதுரை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.ஜெய்னுல் ஆலம் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்திற்கும் , ஏர்வாடி தர்ஹாவிற்கும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் யாத்தீரிகர்கள், சுற்றுலா பயணிகள் , பக்தர்கள் அன்றாடம் வந்து வந்து செல்வதால் அனைவரும் எளிதில் வந்து செல்லும் வகையில் சென்னை - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுமென தென்னக ரயில்வே அறிவித்து இருந்தது. அறிவிப்பு வெளியானதும் யாத்தீரிகர்கள், பயணிகள் , பக்தர்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டதே தவிர ரயில் போக்குவரத்து ஆரம்பிக்காமல் " கடலில் விழுந்த கல் " போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ,தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ.ஜெய்னுல் ஆலம் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி கூறியுள்ளதாவது. பல்வேறு பொதுநல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. இதுவரை வந்தேபாரத் ரயிலை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவது ரயில் பயணிகளிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளன. ஆன்மீக நகரமான ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை இதுவரை தொடங்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
பயணிகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான மதுரை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவில் , ஏர்வாடி தர்காவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு வசதியாகவும் பகல் நேரங்களில் பயணிக்க வியாபாரிகளுக்கு பெரும் உதவியாகவும் ஏராளமான கல்லூரி மாணவர் - மாணவியர்களுக்கு பயன்படத் தகுந்த வகையிலும் இருப்பதால் வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
எனவே , இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஏ.ஜெய்னுல் ஆலம் மனுவில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்