திருப்பூரில் வரதட்சணை கொடுமை - 78 நாட்களிலே பெண் தற்கொலை
திருப்பூரில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு, அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 27 வயதான ரிதன்யா என்ற பெண்ணுக்கும், அப்பகுதியை சேர்ந்த 'கவின்குமார்' என்பவருக்கும் திருமணம் நடந்தது.இந்த நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா சடலமாக கிடந்தார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் சேவூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பிறகு ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் சில ஆடியோக்களை அனுப்பியுள்ளார்.
இந்தத் தகவல்களை காவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அந்த ஆடியோவில், "தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.
கருத்துக்கள்