ஆறுமுகநேரியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
ஆறுமுகநேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியை சேர்ந்த ராஜ்குமார், ராஜா கார்த்திக். இந்த 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா கார்த்திக்கும், அதே பகுதி முத்துக்குமார், காமராஜ் மகன் சூர்யா மற்றும் சிலர் ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் உள்ள கடையில் மது குடித்தனர். அப்போது சூர்யா மற்றவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
ராஜா கார்த்திக், சூர்யாவை கண்டித்ததுடன், மற்றவர்களை சமாதானம் செய்தாராம். இதில் தனக்கு ஆதரவாக அவர் செயல்படவில்லை என சூர்யாவிற்கு கோபம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் ராஜா கார்த்திக்கின் வீட்டிற்கு சூர்யாவும், அவரது தந்தை காமராஜூவும் சென்றுள்ளனர். வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராஜா கார்த்திக்கை காமராஜ் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதை தடுக்க முயன்ற ராஜ்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தொடர்ந்து சூர்யா அவரை வெட்டமுயன்றபோது, தடுத்த சிலுவை அந்தோணி அரிவாளால் வெட்டப்பட்டார். இதை தொடர்ந்து சூர்யாவும், காமராஜூவும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சூர்யா, காமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
கருத்துக்கள்