திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா ஆரம்பம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஜூலை 1) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் வைத்து யாகசாலை பூஜை நடக்கிறது. அதேபோல், சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.மகா கும்பாபிஷேக விழா நாளை (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூைஜயுடன் தொடங்குகிறது. அன்று மாலையில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, 12 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 7-ந் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜையும், காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கின்றது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
கருத்துக்கள்