விஜய்யை விமர்சித்து பதிவிட்டாரா நடிகர் சூரி.. செய்திக்கு பதிலடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சூரி. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் பேசியதாக இணையத்தில் வைரலான வதந்தி ஒன்றுக்கு, நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் பதிவும் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள் என 41 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை, நடிகர் சூரி விமர்சித்திருப்பதாக கூறி இணையத்தில் செய்தி ஒன்று வைரலானது.
இதனை பார்த்த சூரி தனது எக்ஸ் தளத்தில் தனது பெயரில் உலா வரும் செய்தி போலியானது என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "தம்பி தவறான தகவலைப் பரப்புவது சமூகத்துக்கு எப்போதும் தீமையையே தரும். ஆகையால நமது ஒவ்வொரு செயலிலும் நிதானத்தையும், முதிர்ச்சியையும் காட்டுவோம்.
நல்ல மாற்றங்களை பெறுவதற்கு இந்த சமூகம் தகுதியானது. அதனால் அன்பையும், நன்மையையும் பரப்புவதில் உங்கள் சிறந்ததை செய்யுங்கள். அதே போல் எனக்கு பல வேலைகளும், உங்களுக்கு செய்ய வேண்டியவையும் இருக்கின்றது. ஆகையால் நம்முடைய பணிகளில் இப்போது முழு கவனத்தை செலுத்துவோம்". இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் சூரி. கோபம் எதுவும் படாமல் பக்குவமாக அவர் அளித்துல் அறிவுரை இணையவாசிகள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.





கருத்துக்கள்