திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்றவர் கைது
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டறா பகுதியை சேர்ந்தவர் அகிலா (வயது 35). அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அகிலாவுக்கும், எர்ணாகுளம் அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த பினு (38) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து 2 பேரும் அடிக்கடி எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் சம்பவத்தன்று வழக்கம் போல் அந்த விடுதிக்கு சென்று இருவரும் சந்தோசமாக இருந்துள்ளனர். எத்தனை நாள் தான் இப்படி இருவரும் கள்ளக்காதலை ரசிப்பது, எனவே நீ என்னை மணமுடிக்க வேண்டும் என அகிலா, பினுவிடம் வற்புறுத்தியுள்ளார். திருமணம் செய்ய மாட்டேன், இப்படி திருட்டுதனமாகவே வாழ்வோம் என பினு பதிலளிக்க, அது அகிலாவுக்கு கோபமூட்டியது. மேலும் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இதனால் கடுமையான வார்த்தைகளால் பினுவை திட்டினார்.
இதில் ஆத்திரமடைந்த பினு, அகிலா அணிந்திருந்த துப்பட்டாவை பிடுங்கினார். பிறகு துப்பட்டாவால் அகிலா கழுத்தை இறுக்கி கொன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் கொலையை அரங்கேற்றியதும், அவர் முதலில் நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது தனது கள்ளக்காதலியை கொன்று விட்டேன், இதோ உடலை பாருங்கள் என வீடியோ காலில் எந்தவொரு பதற்றமும் இன்றி காட்டியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவரது நண்பர்களே ஆலுவா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து சென்று அகிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து பினுவை கைது செய்தனர்.
கருத்துக்கள்