ஒடிசாவில் சிறுமியை கர்ப்பமாக்கி உயிருடன் புதைக்க முயற்சி - இருவர் கைது
கொடூர செயலில் ஈடுபட முயன்றவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி, நடந்தவை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பனாஷ்பரா பகுதியில் மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தில் பணிபுரிந்து வரும் சகோதரர்கள், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன், தங்களது ஆசைக்கு தொடர்ந்து இணங்க வேண்டும் என சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி, தனக்கு நேர்ந்த துயரத்தை வீட்டில் கூறாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும், சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த சகோதரர்கள், இதனால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என எண்ணினர். இதையடுத்து, சிறிதும் இரக்கமின்றி, கர்ப்பிணியான சிறுமியை உயிருடன் புதைக்க முற்பட்டுள்ளனர். கொடூர செயலில் ஈடுபட முயன்ற அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி, நடந்தவை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துக்கள்