கமுதி அருகே இளம்பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் , மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். 32 வயது ஆன அந்த பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன் அதே பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் 65 வயதான பெண்ணின் மாமனார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.இதை அறிந்த மாமனார் வெளியூருக்கு தப்பி சென்றுவிட்டார் இதனால் மனவருத்தம் அடைந்த இளம்பெண் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். .
அவரை குடும்பத்தினர், காப்பாற்ற முயன்றபோதிலும் அவர் உடல் கருகி பலத்த காயம் அடைந்தார்.அதனை தொடர்ந்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் மாமனாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னதாக அந்த இளம்பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனக்கு மாமனார் அளித்த பாலியல் தொல்லை குறித்து போலீசாரிடம் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் முனீஸ்வரன், மாமியார் சூரம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்