குரூப் 4 விடைத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டதா?
சேலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குரூப் 4 பணிக்கான விடைத்தாள் பெட்டிகளில் உடைப்பு இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விடைத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.
வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. 3,935 பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் சுமார் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடைக் குறிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகாப்பில்லாமல், அட்டைப்பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும், முறையாக சீலிடப்படாமலும் இருக்கிற புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, முறையாக அட்டைப்பெட்டிகளில் போட்டு சீலிடப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும்.ஆனால் சேலத்தில் இருந்து அனுப்பப்பட்ட பெட்டிகள் உரிய பாதுகாப்பின்றி அனுப்பப்பட்டதாக வெளியான புகைப்படங்களால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதில் கட்டுகள் பிரிக்கப்பட்டு, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே, குரூப் 4 தேர்வுக்கான கேள்வித்தாள்கள், மதுரையில் உரிய பாதுகாப்பின்றி ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார். ஆனாலும் அறிக்கை பெறப்பட்டதா, அதன் அடிப்படையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனிடையே, சேலத்தில் விடைத்தாள்கள் உரிய பாதுகாப்பின்றி கொண்டுசெல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்துக்கள்