விளையாட்டு விடுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை - மாணவர்கள் 4 பேர் கைது
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த விளையாட்டு விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, அதே விடுதியில் தங்கி பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள், 10-வது மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என 4 பேர் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடும் மன உளைச்சலில் பாதிக்கப்பட்ட மாணவன், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறினான். இதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோர், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியலிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய 4 மாணவர்களும் விடுதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், 4 மாணவர்கள் மீது, தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார், 4 மாணவர்களையும் அழைத்து விசாரணை நடத்தினர்,
விசாரணையில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.





கருத்துக்கள்