advertisement

கரூர் நெரிசல் வழக்கு:- 2வது நாளாக சிபிஐ  விசாரணை!

டிச. 30, 2025 5:32 முற்பகல் |

 

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணியில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்டோர் ஆஜராகினர். எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் விரிவாக விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, விஜய் நிகழ்ச்சிக்கு வரவிருந்த நேரம், அவர் வருகையில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள், அந்த இடைவெளியில் நிலவிய சூழ்நிலை ஆகியவை குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டதாக சொல்லப்படுகிறது.சுமார் எட்டு மணி நேரம் நீடித்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கேட்கப்பட்ட அனைத்து விவரங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன், தேவையான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement