ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை -வாலிபரை சரமாரியாக தாக்கிய இளம்பெண்
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் இருந்து நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று அங்கோலாவுக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணித்தார். இதில் அவரது சகோதரருக்கு ஜன்னல் இருக்கை வேண்டும் என்று கூறி 2 பேரும் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்தனர்.
இந்தநிலையில் பஸ் புறப்பட்டதும் அந்த இளம்பெண் தூங்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் 28 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்து அமர்ந்தார். பின்னர் சிறிது தூரம் பஸ் சென்றதும், அந்த வாலிபர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் தூங்கி கொண்டிருந்த அந்த பெண் திடீரென விழித்து பார்த்தார்.அந்த வாலிபர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக தனது செல்போனை எடுத்து அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் அவர் பஸ்சில் இருந்து இறங்கி செல்ல முயன்ற வாலிபரை அந்த இளம்பெண் தடுத்து நிறுத்தி கையால் சரமாரியாக தர்ம அடி கொடுத்தார்.
மேலும் வாலிபரை தாக்கியதை இளம்பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அது தற்போது வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அங்கோலா போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.




கருத்துக்கள்