advertisement

ஓடும் வேனில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

ஜன. 02, 2026 7:37 முற்பகல் |


 
தலைநகர் டெல்லிக்கு அருகே அமைந்துள்ள ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, 25 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு தோழியின் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்து எதுவும் வராத நிலையில், சுமார் 12.30 மணி அளவில்,
அந்த வழியாக வேன் ஒன்றில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு விடுவதாக பரிவுடன் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணும் அந்த வேனில் ஏறியிருக்கிறார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் செல்ல வேண்டிய வழித்தடத்தில் செல்லாமல் வேறு பக்கமாக வேன் திரும்பியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வேலை குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வேனில் இருந்த இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவராக அந்த இளம் பெண்ணை வேனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சுமார் இரண்டரை மணி நேரமாக இந்த படுபாதக செயலை அந்த இருவரும் அரங்கேற்றினர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் ராஜா சவுக் என்ற பகுதிக்கு அருகே அந்த வேன் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த இளம் பெண்ணை ஓடும் வேனில் இருந்து தள்ளி சாலையில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். ஏற்கனவே கூட்டு பாலியல் பலாத்காரத்தால் நிலை குலைந்து போயிருந்த அந்த இளம் பெண், ஓடும் வேனில் இருந்து சாலையோரம் வீசப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளார். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் தன்னிடம் இருந்த மொபைல் போனை எடுத்து தனது சகோதரிக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த நள்ளிரவில் இளம் பெண்ணை தேடி வந்த சகோதரி, ஒரு வழியாக இளம் பெண்ணை கண்டுபிடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement