ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன் நான் - ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 31ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் 2 முறை சந்தித்தார். காலை நடைபயிற்சியின்போதும், மாலை முதல்-அமைச்சரை அவரது வீட்டிற்கே சென்றும் சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைவாரா? என்றும் கேள்வி எழும்பியது.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட பதிவில்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் இல்லை. மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சரை நேரில் சென்று நலம் விசாரித்தேன். மேலும், மு.க.முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவே சென்றேன். இந்த சந்திப்பை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல். என்னுடைய மனைவி, தாயார் இறந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நான் திமுகவில் இணைப்போவதாகவும், கூட்டணி வைக்கப்போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர். முதல்-அமைச்சருடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர். முதல்-அமைச்சரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.
2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலேயே முதல்-அமைச்சரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்