கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் அழைப்பு
தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்கான ”கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தகுதியுடைய நபர்களுக்கு தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- வீதம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.
மேலும் இவ்விருதானது ஒரு இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் அதற்கு பின்னர் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்