"விஜய் விஜயம்" செயலிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு – அமைச்சர் ஜெகதீஸ்வரி
ராஜபாளையத்தில் மக்கள் குறைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட "விஜய் விஜயம்" செயலி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, என்று அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ராஜபாளையத்தில் கடந்த 25ம்தேதி நடைபெற்ற "விஜய் விஜயம் 2026" செயலி அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று சிறப்பித்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"விஜய் விஜயம்" செயலிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி சி.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கையுடன், பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
செயலியில் பதிவாகும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, "விஜய் விஜயம்" செயலி குறித்த விழிப்புணர்வை தொகுதி முழுவதும் பரப்பி, அனைத்து மக்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயனடைய வேண்டும். மேலும், மற்றவர்களையும் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.பயன்படுத்துங்கள்... பயனடையுங்கள்... பயன்படுத்தச் செய்யுங்கள்!இவ்வாறு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்