மேட்டுப்பாளையம் - நெல்லைக்கு சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை, வரும் ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்திய இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை, கோவை வழியாகத் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் சேவையாக உள்ளது. இந்த ரயில்கள் ஞாயிற்றுக் கிழமை, திங்கள்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தன.திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் (வண்டி எண்: 06030) ஞாயிற்றுக் கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை காலை 7.30 மணிக்கு வந்து அடையும்.
மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் (வண்டி எண்: 06029) திங்கட் கிழமையன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையம் வந்தடையும்.
2024 டிசம்பரில் இந்த சேவை பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சேவை மீண்டும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் திடீரென ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி முதல் மே 4 வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில் சேவை ஏப்ரல் 14 முதல் மே 6 வரை இயங்கும்.
கருத்துக்கள்